விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, தங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி சொட்டமுறி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், சாலை இலுப்பைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட சொட்டமுறி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் அதிக உப்புத்தன்மை கொண்ட நீரையே வேறு வழியின்றி குடிநீராகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த உப்பு நீரைக் தொடர்ந்து அருந்தி வந்ததால், அப்பகுதியில் உள்ள பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு சிறுநீரகப் பாதிப்பு மற்றும் உப்புச்சத்து அதிகரிப்பு போன்ற பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு, அவர்கள் தொடர் மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தங்கள் கிராமத்திற்கு முறையான குடிநீர் விநியோகம் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கு உடனடியாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக வாயிலில் அமர்ந்து அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வாசுகி மற்றும் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சொட்டமுறி கிராமத்திற்கு விரைவில் சுத்தமான குடிநீர் கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மேலும், கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும், அதுவரை தற்காலிக ஏற்பாடாக தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் சொட்டமுறி கிராமத்தில் பிரத்யேக தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், அப்பகுதி மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு வரும் திங்கட்கிழமை கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார்.
அதிகாரிகளின் இந்த சமரச பேச்சுவார்த்தை மற்றும் உறுதியான வாக்குறுதிகளைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றனர்.

