விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
ரோசல்பட்டி ஊராட்சியில் தங்களை வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுத்தி வந்த நிலையில், தற்போது ஊராட்சியின் அனைத்துச் சாலைகளையும் தங்களையே சுத்தம் செய்யுமாறு ஊராட்சி நிர்வாகம் வற்புறுத்துவதாகத் தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், தற்போதைய பணி மேற்பார்வையாளர் சரிவரப் பணியாற்றுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர்கள், தங்களில் ஒருவரையே புதிய பணி மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இக்கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திரளாகப் பங்கேற்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

