சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில், ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு 1,801 பிஸ்கட் பாக்கெட்டுகளால் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அபூர்வ அலங்காரம் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
சிவகாசி பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள இத்தலமானது, குழந்தை வரம் அருளும் ஆன்மீகத் தலமாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் குழந்தை வரம் வேண்டி வழிபடும் தம்பதியருக்குத் தவறாமல் பலன் கிடைக்கும் என்பது நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பொருட்களில் ஒன்றான பிஸ்கெட்டுகளைக் கொண்டு, குழந்தை வரம் தரும் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதாகக் கோவில் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிச் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அகல் விளக்குகளேற்றி அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

