விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பேருந்து நிலையப் பகுதியில் தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு வேன் பிரச்சாரப் பயணம் தொடங்கியது. இப் பயணத்தை அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அர்ஜுனன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
விருதுநகர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் 'காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு' இணைப்பு கால்வாய் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தி இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
திருச்சுழியில் தொடங்கியுள்ள இந்த வேன் பிரச்சாரப் பயணம் ஆகஸ்ட் 1 முதல் 5-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள 7 மாவட்டங்கள் வழியாகப் பயணிக்கும் இக் குழுவினர், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாயனேரி காவிரி ஆற்றங்கரையில் பிரச்சாரத்தை நிறைவு செய்யவுள்ளனர்.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் அர்ஜுனன், "தமிழக ஆளுங்கட்சியான த.வெ.க அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய், வரும் 2026-27 மாநில பட்ஜெட்டில் காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ராம்பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

