விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விதிமீறல்கள் காரணமாக சுமார் 200 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால், 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு ஆலைகளை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பெண் தொழிலாளி ஒருவர் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கந்தகப் பூமியான சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, அரசு அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வுகளின்போது பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட சுமார் 200 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பொதுவாக, விதிமீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டு மூடப்படும் ஆலைகளின் தவறுகள் சரிசெய்யப்பட்ட பிறகு, 30 நாட்களில் மீண்டும் இயங்க அனுமதி வழங்கப்படும். ஆனால், தற்போது பல மாதங்கள் கடந்தும் ஆலைகளைத் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் எவ்வித வருவாயும் இன்றி தொழிலாளர்களின் குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.
இந்நிலையில், சிவகாசியைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "பட்டாசு வெடித்து இறக்கிறோமோ இல்லையோ, பசி பட்டினியால் இறக்கும் சூழல் உருவாகியுள்ளது. வேலை இல்லாததால் குழந்தைகள் உணவின்றி தவிக்கின்றனர். எங்கள் பகுதியில் உள்ள இந்தப் பிரச்சினையை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, முதலமைச்சர் தலையிட்டு உடனடியாகப் பட்டாசு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

