நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கணபதி (26). பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர், மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில் மதுபோதையில் வீட்டிற்கு சென்ற கணபதி, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து தனது தாயாருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார், போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாளையங்கோட்டை காவல் சரக ரோந்து வாகனத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு சென்றார். அவருடன் ஆயுதப்படை காவலர் கருணாகரன் ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டிருந்த கணபதியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த கணபதி, சாலையோரம் கிடந்த கற்களை எடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் காவலர் கருணாகரன் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணபதியை சுற்றிவளைத்து கைது செய்தனர். காயமடைந்த இரு போலீசாரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செய்திகள்
நெல்லையில் மதுபோதையில் தகராறு – தட்டிக்கேட்ட போலீசாரை கற்களால் சரமாரியாக தாக்கிய வாலிபர் கைது!
The News Outlook
🕒 11 ஆக., 2026, 07:32 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
