விருதுநகரில் நுகர்வோர் உரிமைகள் கமிட்டி சார்பில் பிரம்மாண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பலகைகளை ஏந்திச் சென்றனர்.
விருதுநகர் கிருஷ்ணமாச்சாரி சாலையில் அமைந்துள்ள ஹாஜி பீ செய்யது முகம்மது மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில், துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் கலந்துகொண்டு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) மாணிக்கம், நுகர்வோர் உரிமைக் கமிட்டி நிர்வாகிகள் முகமது எஹியா, மகேந்திரன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் முகமது சுல்தான், செய்யது உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இப்பேரணியில் பங்கேற்ற ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், "சீக்கிரமாய் புறப்படுவோம்; மெதுவாய் செல்வோம்", "மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதே", "படியில் பயணம்; நொடியில் மரணம்" உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கிருஷ்ணமாச்சாரி சாலையில் துவங்கிய இப்பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று இறுதியாக தேசபந்து மைதானத்தை வந்தடைந்து நிறைவுற்றது.

