ராஜபாளையத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 18, 19, 21, 24 வது வார்டுகளில் உள்ள வடக்கு மலையடிபட்டி, மஞ்சள் மாரியம்மன் கோயில் தெரு, குறிஞ்சி நகர், காட்டுநாயக்கர் தெரு, குடில் தெரு, நகராட்சி காலனி, முருகன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு முதல் எட்டு நாட்களுக்கு ஒரு முறை நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 21 நாட்களாகியும் இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து நகராட்சி துறையினரிடம் கேட்டும் முறையான பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் என 100 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மலையடிப்பட்டி நான்கு முக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வடக்கு காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்படுவதாகவும், குடிநீர் திறந்து விட ஆபரேட்டர் பணம் கேட்பதாகவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பயன்படுத்தும் குழாய்களை முறையாக பராமரிக்காமல் குடிநீரை கழிவு நீர் ஓடையில் வீணாக்குவதாகவும் பொதுமக்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாளை மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காவல்துறை அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக்கொண்ட பொது மக்கள் கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த வழியாக போக்குவரத்து சீரானது.
செய்திகள்
ராஜபாளையத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் நடத்திய சாலை மறியல்.
The News Outlook
🕒 20 ஜூலை, 2026, 01:56 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
