நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் நம்பியாற்றில், மீன்பிடி வலையில் சிக்கி உயிருக்குப் போராடிய ராட்சத மலைப்பாம்பு ஒன்றை கிரீன் கேர் அமைப்பினர் பத்திரமாக மீட்டனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் ஓடும் நம்பியாற்றுப் பகுதியில் சிலர் மீன்பிடிப்பதற்காக வலைகளை விரித்து வைத்துள்ளனர் இந்நிலையில், ஆற்றுப் பகுதிக்குச் சென்ற பொதுமக்கள், அங்கு விரித்திருந்த மீன்பிடி வலையில் சுமார் 10 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கி, வெளியே வர முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் உடனடியாக ‘கிரீன் கேர் அமைப்பின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில், கிரீன் கேர் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, அங்கு கூடி இருந்த பொதுமக்களின் உதவியோடு, கிரீன் கேர் தன்னார்வலர்கள் இணைந்து தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பு எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து திருக்குறுங்குடி வனச்சரக அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்திகள்
மீன்பிடி வலையில் சிக்கி தவித்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு: ஏர்வாடி அருகே பரபரப்பு
🕒 17 ஆக., 2026, 02:43 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
