விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முடியனூர் கிராமத்தில் முறையான மயானப் பாதை இல்லாததால், இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், உடனடியாகச் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சொந்த ஊரான மல்லாங்கிணறு பகுதிக்கு அருகில், சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முடியனூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள மயானத்திற்குச் செல்வதற்குச் சீரான சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை விவசாய நிலங்கள் வழியாகவே சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.
குறிப்பாக, மழைக்காலங்களில் இப்பாதை சேறும் சகதியுமாக மாறுவதாலும், மற்ற நேரங்களில் கரடுமுரடாக இருப்பதாலும் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவதில் கிராம மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் உயிரிழந்த ஒருவரின் உடலை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே சேற்றுப் பாதையில் சுமந்து செல்லும் காட்சி வீடியோவாக வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் பிரதிநிதியின் சொந்த ஊருக்கு அருகிலேயே இத்தகைய அடிப்படை வசதிக்கான அவல நிலை பல ஆண்டுகளாகத் தொடர்வது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாகத் தலையிட்டு, முடியனூர் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மயானப் பாதையைச் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

