சிவகாசி: "அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் வீணாகிக் கொண்டிருக்கிறார்கள்; தங்களை வளர்த்துவிட்ட இயக்கத்தையே தூக்கி எறிந்தவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தூக்கி எறிய எவ்வளவு நேரமாகும்?" என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"அதிமுகவில் 10 ஆண்டுகள் அமைச்சராகவும், 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துவிட்டு, தங்களை வளர்த்தெடுத்த இயக்கத்தையே தூக்கி எறிந்துவிட்டுச் செல்பவர்கள், நாளடைவில் தவெகவையும் தூக்கி எறிய எவ்வளவு நேரமாகும்? இதனைப் புரிந்துகொண்டு தவெக நிர்வாகிகளும், அக்கட்சியின் தலைவர் விஜய்யும் விழிப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
அதிமுகவில் இருந்து சென்றவர்கள் யாரும் விஜய் முதல்வராக வேண்டும் என்பதற்காக உழைக்கவில்லை. தவெகவில் ஏற்கனவே உண்மையாக உழைத்தவர்களை ஓரங்கட்டி பதவிக்கு வர நினைப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். தற்போதைய சூழலில் தவெக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்."
"எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது"
"அதிமுகவின் வேர் மிகவும் வலுவாக உள்ளது. வேர் இருக்கும் வரை மரம் செழித்து வளரும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சக்திவாய்ந்த இயக்கமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரைப் போன்று, தம்மை எதிர்ப்பவர்களையும் எதிர் குரல் எழுப்புபவர்களையும் அனுசரித்துச் செல்லும் பக்குவம் கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
அதையும் மீறி அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் வீணாய்ப் போவார்கள் என்பது எங்களுக்கும் தெரியும், தமிழக மக்களுக்கும் தெரியும். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனி முத்திரை பதிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அரசு நிர்வாகம் மற்றும் நீட் தேர்வு குறித்த கருத்து:
தொடர்ந்து பேசிய அவர், "தற்போதைய ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி கவலைப்படுவதை விட, தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள். லாக்-அப் மரணங்கள் குறித்து அன்று பேசியது போல் பேசாமல், தற்போது நியாயமான முறையில் முதலமைச்சரும் அரசு நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எடுத்த நடவடிக்கை, மாணவர்கள் சமுதாயம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவாகும். போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்து கொண்டு மத்திய அரசு எடுக்கும் முடிவை 'அடிபணிந்தது' என்று சொல்லக் கூடாது. பெரும்பான்மை மக்களின் நிலைப்பாட்டையே எந்தவொரு அரசும் நடைமுறைப்படுத்தும்.
அதேபோல், 'பாசமலர்', 'பாகப்பிரிவினை', 'பாலும் பழமும்' போன்ற திரைப்படங்களைப் பார்த்தால் அழுகை வரும். ஆனால் விஜய், அஜித் திரைப்படங்கள் சண்டைக் காட்சிகளுடன் உற்சாகமூட்டக் கூடியவை; அத்தகைய திரைப்படங்களைப் பார்த்து அழ வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

