தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள நியாயவிலை கடைகளில் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பேசிய அமைச்சர் வெங்கடரமணன், ஈரான் போர் சூழல் மற்றும் வாகன எரிவாயு விலை உயர்வு காரணமாக போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், வெளிச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.56 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நியாயவிலை கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
அதன்படி, வரும் செப்டம்பர் 3 முதல் நகர்ப்புற நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

