திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், மூன்று குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் இன்று (14.08.2026) தீர்ப்பளித்தது.
2021 செப்டம்பர் 1ஆம் தேதி மதியம் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் குற்ற எண் 422/2021-ன் கீழ் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் அரசு தரப்பு சார்பில் அரசு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடிய நிலையில், நீதிபதி 14 ஆகஸ்ட் 2026 அன்று தீர்ப்பளித்தார். அதன்படி மூன்று குற்றவாளிகளும் கொலை குற்றத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையுடன் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திறம்பட விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

