நாடு முழுவதும் 80வது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையை மையமாகக் கொண்டு போலீஸ், துணை ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்ச்சி டெல்லி செங்கோட்டையில் நடைபெறுகிறது. அங்கு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கான உரையாற்ற உள்ளார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி முழுவதும் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனச் சோதனை, அடையாளச் சரிபார்ப்பு மற்றும் ட்ரோன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு டெல்லி பகுதியில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், செங்கோட்டையைச் சுற்றியுள்ள பல சாலைகளில் நாளை போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. பேருந்து சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதுடன், சரக்கு வாகனங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான சில பேருந்துகளுக்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு டெல்லி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

