திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான 3.5 கிலோ 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' (Hydroponic Cannabis) போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு (Air Intelligence Unit) அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்தடைந்த பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ எடையுள்ள உயர்ரக 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.3.5 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அந்தப் பயணியைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

