சாதித்துக் காட்டிய அரசுப் பள்ளி மாணவர்கள்! விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் IIT மற்றும் NIT-க்குள் நுழையும் கிராமப்புற ஏழைக் குழந்தைகள்! விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஏதுவாக, 80 மாணவ-மாணவியரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஜே.இ.இ (JEE) மற்றும் நீட் (NEET) தேர்வுகளுக்கான "திறன்" (Thiran) என்ற சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தனியார் கல்லூரி ஒன்றில் வைத்து நடத்தப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் இந்தத் திட்டமிட்ட மற்றும் தொடர் முயற்சியின் பயனாக, கடினமான ஜே.இ.இ (JEE) நுழைவுத்தேர்வை எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 11 பேர் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். இதில் முதற்கட்டமாக, ஆறுமுக வேல் ராகவன், தரணியா ஆகிய இரண்டு மாணவர்கள் தேசிய தொழில்நுட்பக் கழகத்திற்கும் (NIT), லோகேஷ் என்கின்ற ஒரு மாணவர் இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கும் (IIT) தேர்வு செய்யப்பட்டுத் தங்களது சேர்க்கையை உறுதி செய்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மீதமுள்ள 8 மாணவர்களுக்கான அடுத்தகட்டக் கலந்தாய்வு வரும் வாரத்தில் நடைபெற உள்ளது. இவர்களும் தங்களது மதிப்பெண்களின் அடிப்படையில் நாட்டின் முன்னணி ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற புகழ்பெற்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இடங்களைப் பெறுவார்கள் என்று கல்வித்துறை வட்டாரங்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கின்றன. மிகவும் எளிய குடும்பப் பின்னணியைக் கொண்ட, கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் தங்களது வறுமையையும் தாண்டி, இந்தியாவின் முதன்மைத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்குப் பயிலச் செல்வது ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்ட மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது. மாணவர்களின் இந்தச் சாதனைக்குத் துணைநின்ற மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர். பேட்டி இணைக்கப்பட்டுள்ளது.
செய்திகள்
சாதித்துக் காட்டிய அரசுப் பள்ளி மாணவர்கள்! விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் IIT மற்றும் NIT-க்குள் நுழையும் கிராமப்புற ஏழைக் குழந்தைகள்!
The News Outlook
🕒 14 ஜூலை, 2026, 11:16 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

