விருதுநகர்: ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல வரும் 12-ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இத்தலம், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. சித்தர்கள் இன்றும் இங்கு வாழ்ந்து வழிபட்டு வருவதாக நம்பப்படுவதால், இக்கோயில் 'சித்தர்களின் சொர்க்க பூமி' என்றும் போற்றப்படுகிறது.
இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைக்கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகை தருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் கோயில் அமைந்துள்ளதால், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களைக் கருத்தில் கொண்டு, மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் தலா 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலை ஏறிச் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, வரும் 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

