நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோவில்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (33). இவர் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் இவரைப் பலமுறை கைது செய்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர் அவ்வாறு ஒரு வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டபோது, நெல்லை அரசு மருத்துவமனையில் வைத்து காவல்துறையினர் தனக்கு மர்ம ஊசி ஒன்றை உடலில் செலுத்தியதாக சங்கர் குற்றம் சாட்டுகிறார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவருக்கு உடல் முழுவதும் வீக்கம், பல்வேறு இடங்களில் வடுக்கள் மற்றும் கடுமையான எரிச்சல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தனக்கு ஏற்பட்ட இந்த பாதிப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சங்கர் பலமுறை மனுக்களை அனுப்பியுள்ளார். இருப்பினும், அந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சங்கர், இன்று தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் திடீரென தனது குடும்பத்தினருடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், உடனடியாகச் செயல்பட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தி, உடலில் தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

