விருதுநகர்: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) காலியாக உள்ள கள உதவியாளர் (Field Assistant - Wireman / Electrician) பணியிடங்களுக்கான செய்முறைத் தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) உள்ளிட்ட தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இம்மையத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களும் அடங்கிய நூலகம் மற்றும் அதிவேக இணையதள (Wi-Fi) வசதியுடன் கூடிய கணினி ஆய்வகமும் செயல்பட்டு வருகிறது.
தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாகத் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர் (Wireman / Electrician) பணியிடங்களுக்கான செய்முறைத் தேர்வு (Practical Test) நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் தேர்வர்களுக்காக, மின்கம்பம் ஏறுவதற்கான சிறப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடத்தப்படவுள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தேர்வர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்றோ தங்களது பெயர்களைப் பதிவு செய்வது அவசியமாகும்.
எனவே, இச்செய்முறைத் தேர்விற்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.

