விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள வீரசோழன் பகுதியில், நரிக்குடி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சுப்பையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயபெருமாள் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜெயபெருமாள் பேசியதாவது:
"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் கட்சியை வழிநடத்திய காலகட்டங்களிலும், சிலர் கட்சியை விட்டு விலகிச் செல்லும் நிகழ்வுகள் நடந்துள்ளன. எனினும், அத்தகைய பல்வேறு சோதனைகளைக் கடந்துதான் அதிமுக இன்றளவும் கம்பீரமாக இயங்கி வருகிறது.
எனவே, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக கிளைச் செயலாளர்கள் முதல் உயர் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைத்து, கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் குருசாமி, அண்ணா தொழிற்சங்கப் போக்குவரத்துப் பிரிவுத் துணைச் செயலாளர் வீரேசன், மாவட்ட மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர் உட்படப் பெருந்திரளான கட்சியினர் கலந்துகொண்டனர்.

