விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி (18.08.2026) முற்பகல் 11.00 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
அந்தந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் இக்கூட்டங்கள், சிவகாசி உதவி ஆட்சியர் மற்றும் அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறவுள்ளன.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்று, விவசாயம் மற்றும் தனிநபர் சார்ந்த கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்துத் தீர்வு காணலாம். மேலும், வட்டார அளவில் பெறப்படும் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்குத் தாமதமின்றித் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

