விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்டது.
வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் தனிநபர் ஒருவர் 14 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, வருவாய்த்துறையினர் அப்பகுதியில் நில அளவீடு செய்தனர். அந்த ஆய்வில், குறிப்பிட்ட நிலம் வனத்துறைக்கே சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குறிப்பிட்ட 14 கடைகளும் தனது சொந்தப் பட்டா நிலத்திலேயே அமைந்துள்ளன எனக் கூறி, சம்பந்தப்பட்ட தனிநபர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நிலத்தின் உரிமை தொடர்பாக வனத்துறையினரும், மனுதாரரும் தங்களிடம் உள்ள உரிய ஆதாரங்களை சனிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சில கடைகள் மட்டுமே அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள கடைகளை அகற்றும் பணியைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு வருவாய்த்துறையினரும் வனத்துறையினரும் அங்கிருந்து திரும்பினர்.

