சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்லும் தானிப்பாறை அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய மரத்தில் ஆபத்தான கதண்டு குளவிகள் கூடு கட்டியுள்ளதால், பக்தர்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு, பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், கோவிலுக்குச் செல்லும் முக்கியப் பாதையான தானிப்பாறை அடிவாரப் பகுதியில் ஏராளமான தற்காலிக மற்றும் நிரந்தரக் கடைகள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய மரத்தில் கதண்டு குளவிகள் பெரிய அளவில் கூடு கட்டியுள்ளன.
அப்பகுதியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், எந்த நேரத்திலும் குளவிகள் கலைந்து தாக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால் வியாபாரிகளும், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் மிகுந்த பீதியுடன் அப்பகுதியைக் கடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளும் நிர்வாகத்தினரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த கதண்டு குளவிக் கூட்டை பாதுகாப்பான முறையில் அகற்றி, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களும் பக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

