தலித் கிறிஸ்தவர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தலித் கிறிஸ்தவர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆணையத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையொட்டி திரு இருதய ஆண்டவர் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி சபரிமுத்து கருப்புக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து அவரது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். மேலும், கருப்பு பட்டை அணிந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தலித் கிறிஸ்தவர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

