சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசைத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து, தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் தென்மண்டல காவல் தலைவர் (ஐ.ஜி.) விஜயேந்திர பிதாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசைத் திருவிழா வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து விரிவான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை நுழைவு வாயில் மற்றும் பக்தர்கள் செல்லும் மலைப்பாதை ஆகிய பகுதிகளில் தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது, பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அவசரகால ஏற்பாடுகள் குறித்து அங்கு பணியில் இருந்த துறை அதிகாரிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

