விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் இத்திருக்கோவிலில், திருவிழாவின் முதல் நாள் நிகழ்வாக நள்ளிரவில் பாரம்பரிய 16 கால் சப்பர வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட 16 கால் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னார் எழுந்தருளிய பின்னர், கீழரத வீதியில் தொடங்கிய பவனி தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் வடக்கு ரத வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது. ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்கு முன்னோட்டமாக இந்த 16 கால் சப்பர வீதி உலா நடத்தப்படுவது சிறப்பு அம்சமாகும்.
இந்த நிகழ்வில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, "கோவிந்தா... கோபாலா..." என்ற பக்தி முழக்கத்துடன் சப்பரத்தை இழுத்து வழிபட்டனர். பக்தர்களின் பக்தி பரவசத்தால் கோவில் மற்றும் ரதவீதிகள் முழுவதும் ஆன்மிகச் சூழல் நிலவியது.

