விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவமனை வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, தலைக்காய அவசர சிகிச்சை பிரிவை உடனடியாகத் தொடங்குவது, மருத்துவமனை உணவகங்களை அனுமதிக்கப்பட்ட 300 சதுர அடி பரப்பளவிற்குள் மட்டுமே அமைப்பது மற்றும் அங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன், காங்கிரஸ் நிர்வாகி எட்வர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பிரபாகரன், ஆதி தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ், தலித் விடுதலை இயக்க நிர்வாகி பீமாராவ், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் நல்லதம்பி, மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கமல்கண்ணன், பன்னீர், ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் மாலமுருகன் மற்றும் அனைத்துக் கட்சி மக்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

