நெல்லை மாவட்டத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் விரிவாகக் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையிலான 12 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சிறப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இந்த பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார் கிராமியக் கலைகள் மூலம் கருத்துக்களை பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும் என்பதால், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
மேலும், பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் ஆட்டோக்கள் மற்றும் பிற வாகனங்களில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நோட்டிஸ் ஒட்டப்பட்டது தொடர்ந்து, எய்ட்ஸ் இல்லா சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசுத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

