தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை தேனி–மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
காரில் சென்ற சிலர், யானை சாலையை கடந்து செல்வது போன்ற காட்சிகளை தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்பட்டது. இந்த வீடியோ வைரலான நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ
ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை நடமாட்டம் தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில், திடீரென யானை சாலையில் செல்வது போன்ற காட்சி வைரலானதால் வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
விசாரணையில், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட போலி காணொளி என்பது தெரியவந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
தேனி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில், யானை சாலையை கடந்து செல்வதாக வெளியான வீடியோ பொதுமக்களிடம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது
இந்த வீடியோவை எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அழகு ராஜா (27) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் காட்டு யானை சாலையை கடந்து சென்றதாக பரவும் வீடியோவை நம்ப வேண்டாம் என்றும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

