திருச்சி, ஆக. 26: தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் பெயர் மற்றும் பதிவு எண்ணை முறைகேடாக பயன்படுத்தி கூட்டம் நடத்த முயற்சிப்பதாக கூறி, சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு (பதிவு எண்: 459/2002) சார்பில், மாநில தலைவர் ஆர். குழந்தைவேலு, மாநில பொதுச் செயலாளர் பி. சண்முகம், மாநில பொருளாளர் என். திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இந்த மனுவை அளித்தனர்.
ஆகஸ்ட் 30-ல் கூட்டம் நடத்த திட்டமா?
கூட்டமைப்பின் நிர்வாகிகள் அளித்துள்ள புகாரில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் மாநில பொதுக்குழு, செயற்குழு மற்றும் நிர்வாகக் கூட்டங்கள் முறையாக நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட ஜானகிராமன் மற்றும் கிசிங்கர் ஆகிய இருவர், கூட்டமைப்பின் பெயர் மற்றும் பதிவு எண்ணை பயன்படுத்தி வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், கூட்டமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பண வசூல் செய்வது, கிளைச் சங்கங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மற்றும் ஸ்பான்சர் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி ஆதாயம் தேடுவது உள்ளிட்ட செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எனவே, கூட்டமைப்பின் பெயர் மற்றும் பதிவு எண்ணை பயன்படுத்தி எந்தவொரு கூட்டத்தையும் நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும், முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படும் ஜானகிராமன் மற்றும் கிசிங்கர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளனர்.

