விருதுநகர்: வரும் ஜூலை 28ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னைக்கு இணையாக தென் மாவட்டங்களிலும் பிரம்மாண்டமான முறையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்த தென்மண்டல ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது.
இக்கூட்டம் விருதுநகர் மாவட்டத் தலைவர் ஜமால் தலைமையில் நடைபெற்றது. இதில் தென்மண்டல அமைப்புச் செயலாளர் 'மனிதன்' முஸ்தபா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்ற மாநிலத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சுப்பிரமணிய சிவா கலந்துகொண்டு, மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் சுப்பிரமணிய சிவா, தனுஷின் பிறந்தநாள் அன்று செய்யப்படவுள்ள மக்கள் நலப்பணிகள் குறித்து விளக்கினார். அவர் பேசுகையில், "நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி ஜூலை 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட ரத்ததான முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அத்துடன், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் தமிழகம் முழுவதும் நலிவடைந்த 500-க்கும் மேற்பட்டோருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 32 பேருக்கு இலவச ஆட்டோக்கள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, தனுஷ் புதிய கொடியை அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் உள்ள காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சுப்பிரமணிய சிவா, "இந்தக் கொடி ஏற்கனவே எங்களிடம் பயன்பாட்டில் இருந்ததுதான். மற்ற முக்கிய மற்றும் கொள்கை முடிவுகள் அனைத்தையும் தலைவர் தனுஷ் அவர்களே முறைப்படி அறிவிப்பார். தற்போதைய கூட்டம் முற்றிலும் அவரது பிறந்தநாளில் பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளைச் செய்வதற்கான ஒரு கலந்தாய்வு மட்டுமே" என்று விளக்கமளித்தார்.
மேலும், சென்னையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை நேரில் சந்தித்து தனுஷ் புகைப்படம் எடுப்பது போல, தென் மாவட்ட ரசிகர்களின் நலன் கருதி இங்கும் அத்தகைய நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் மாநிலத் தலைமைக்கு இக்கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

