விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் உள்ள நேரு சிலை எதிரே, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
முக்கிய கோரிக்கைகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், 2 ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன்வைத்தனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

