பெரம்பலூர் நகரில் வீடுகளின் காம்பவுண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மர்ம நபர்களால் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிலிண்டர்களை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள மின்நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் போதே வீடுகளின் காம்பவுண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாலை சிலிண்டர் திருட்டு
மின்நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த 6-ம் தேதி காணாமல் போனது. இதையடுத்து அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதில் அதிகாலை 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி உள்ளே குதித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டரை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் நடந்த சிலிண்டர் திருட்டு
இதே பகுதியில் வசிக்கும் சக்திபாலன் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரும் கடந்த 24-ம் தேதி காணாமல் போனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மாலை 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்று சிலிண்டரை திருடியுள்ளார்.
பின்னர் சிலிண்டரை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு அங்கிருந்து சென்ற காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணை
இந்த சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட முருகேசன் மற்றும் சக்திபாலன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளின் காம்பவுண்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் சிலிண்டர்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

