விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்து செல்வம், வழக்கம்போல் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆட்டோவை அடித்து சேதப்படுத்தியதுடன், அதனை தலைகுப்புற கவிழ்த்து தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
ஆட்டோ தீப்பற்றி எரிவதைப் பார்த்த முத்து செல்வம், உடனடியாக தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் தீ வேகமாக பரவியதால் ஆட்டோ முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
இதற்கிடையே, அதே பகுதியில் நள்ளிரவு நேரத்தில் மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் சிலர் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய அதே நபர்கள்தான் ஆட்டோவையும் அடித்து நொறுக்கி தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவை சேதப்படுத்தி தீ வைத்தவர்கள் யார், எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் கிடைக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

