நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் கடந்த சில மாதங்களாகவே கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. பாபநாசம் மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள அனவன்குடியிருப்பு, டாணா, சங்கரபாண்டியபுரம் மற்றும் திருப்பதியாபுரம் ஆகிய பகுதிகளில் மலைகளில் இருந்து இறங்கி வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது தொடர்கதையாகி உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பொதிகை நகர் காலனியில் ஆள் நடமாட்டம் இருந்தபோதே, குட்டியுடன் வந்த கரடி ஒன்று திடீரென வீட்டின் மதில் சுவர் மீது ஏறி உள்ளே நுழைய முயன்றுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக பட்டாசுகளை வெடித்தும், பெருஞ்சத்தம் எழுப்பியும் கரடியை விரட்டியடித்தனர்.
இந்தச் சம்பவத்தை அப்பகுதியினர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இரவு பகலாக வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தபோதிலும், குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவது குறையவில்லை. எனவே, அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன், வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்து கரடிகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்

