விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி, பொதுமக்களிடம் சுமார் ரூ.5 கோடி வரை பணம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி தெருவைச் சேர்ந்த சீதாராமன் என்பவரின் மனைவி காளீஸ்வரி (57). இவர் தனது மகன் ஜெகன்நாத் (32), மருமகள் பொன்லட்சுமி (30) ஆகியோருடன் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் செலுத்தும் பணத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை நம்பி 100-க்கும் மேற்பட்டோர் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியுள்ளனர்.
ஆனால், பணம் செலுத்தியவர்களின் முதிர்வு காலம் முடிந்த பிறகும் அவர்களுக்கான தொகையை திருப்பி வழங்காமல் நிதி நிறுவன நிர்வாகிகள் காலம் தாழ்த்தியதாக புகார் எழுந்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் சுமார் ரூ.5 கோடி வரை பண மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காளீஸ்வரி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், காளீஸ்வரி இதுபோன்று பல்வேறு பண மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், காளீஸ்வரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டார்.
இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காளீஸ்வரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

