திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 51-வது வார்டுக்கு உட்பட்ட கற்பக விநாயகர் நகர் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது.. எங்கள் குடியிருப்பு பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த 30 அடி சாலையை தனி நபர் ஒருவர் தோண்டி சாலையை மறித்துள்ளார். இதனால் 30 அடி போக்குவரத்து சாலை தற்போது ஐந்து அடி மட்டுமே உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டபோது, இதனால் வரை பயன்படுத்தி வந்த 30 அடி சாலை இருந்த பகுதி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது என்றும் தற்போது அந்த நிலத்தை (Housing Board Land) வாங்கியதாகக் கூறும் தனிநபர், வழக்கமாகப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையைத் தோண்டி, பாதாள சாக்கடை குழாய்களையும் சேதப்படுத்தி உள்ளார். மாநகராட்சி சார்பில் இந்த சாலை பராமரிப்பில் உள்ளதாகச் சான்று வழங்கப்பட்டுள்ள நிலையிலும், தற்போது திடீரென சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாலை தோண்டப்பட்டு பாதாள சாக்கடை சேதப்படுத்தப்பட்டதால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. இதனால் அன்றாடத் தேவைகளுக்கே மக்கள் பெரிதும் அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது. சாலை முற்றிலுமாக அடைக்கப்பட்டு, வெறும் 5 அடிக்கும் குறைவான பாதையே எஞ்சியுள்ளதால், பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் பிற வாகனங்கள் எதுவுமே எங்கள் பகுதிக்குள் நேரடியாக வர முடியவில்லை. இதனால் பள்ளிச் செல்லும் குழந்தைகள் அரை கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், அவசர தேவைகளுக்குக் கூட கார் அல்லது வாகனங்களை இயக்க முடியாமல் முதியோர்களும், நோயாளிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து இப்பகுதி குடியிருப்பு நலச்சங்கத்தினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவித சாதகமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், இப்பகுதி குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 35 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த சாலையை உடனடியாக மீட்டுத் தரவும், தடைபட்ட குடிநீர் விநியோகத்தை உடனடியாகச் சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கள் போராட்டத்தின் வாயிலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்திகள்
35 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த சாலையை காணவில்லை! பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
The News Outlook
🕒 8 ஆக., 2026, 06:20 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
