திருச்சி மாவட்டம் முசிறி அருகே புதிதாக கோழிப்பண்ணைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாளசிராமணி, ஜடமங்கலம், ஜம்புமடை ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக துறையூர்–நாமக்கல் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தா.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த கிராமங்களில் ஏற்கனவே தனியார் நிறுவனம் சார்பில் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இதனிடையே, அதே பகுதியில் மேலும் சில கோழிப்பண்ணைகளை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், துர்நாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், முசிறி வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், தங்களது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, கடந்த மாதம் 1-ந்தேதி 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து ஜம்புமடை கைகாட்டி பகுதியில் துறையூர்–நாமக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோழிப்பண்ணை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி அதிருப்தியடைந்த பொதுமக்கள் இன்று மீண்டும் ஜம்புமடை கைகாட்டி பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக கோழிப்பண்ணைகள் அமைப்பதை தடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ள கோழிப்பண்ணைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முசிறி தாசில்தார் வீரப்பன், டி.எஸ்.பி. முத்துக்குமார், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

