விருதுநகரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் 24 மணி நேர தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்–மதுரை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவையான நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்கள் மூலம் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் முறையை கைவிட்டு, அரசே மின்சாரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கான அனைத்து பணிக்காலப் பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று தொடங்கியுள்ள 24 மணி நேர தொடர் முழக்கப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என சிஐடியு தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

