தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், விருதுநகரில் கோடை வெயிலின் தாக்கம் தணியாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில், வெப்பத்தின் தாக்கம் குறைந்து நல்ல மழை பெய்ய வேண்டி, பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் நகர் மண்டலம் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
விருதுநகர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு காய்ச்சக்கார அம்மன் கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஜக கிழக்கு மாவட்ட அமைப்பாளர் தினேஷ் ராஜா தலைமை தாங்கினார். அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கூழ் ஊற்றிப் பிரார்த்தனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்குப் பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.
இந்தச் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில், பாஜக நகர் மண்டல அமைப்பாளர் கிருத்திகா சரவணன் உள்ளிட்ட கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

