ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6 வயது மாணவர் பிரணய் தேஜா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை என ஆசிரியர் மாணவரை தாக்கியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள லிட்டில் கார்டன் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வகுப்பறையில் ஆசிரியர் மாணவரை கண்டித்ததாகவும், பின்னர் அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மாணவர் மயங்கி விழுந்துள்ளார். பள்ளி ஊழியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மாணவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி காட்சியால் பரபரப்பு
வகுப்பறையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் மாணவர் ஆசிரியரின் முன்பு நிற்பதும், பின்னர் ஆசிரியர் அவரை அடிப்பதும், அதன்பிறகு மாணவர் மயங்கி விழுவதும் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மாணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா அல்லது ஆசிரியர் தாக்கிய சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. பிரேதப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் கடும் எதிர்ப்பு
மாணவர் பள்ளிக்கு செல்லும் முன்பு நல்ல உடல்நிலையில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

