நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் மூலிகைகளை தழுவியபடி குளிர்ச்சியுடன் தண்ணீர் ஓடி வருவதால், அதில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், களக்காடு தலையணை நுழைவு கேட்டில் இருந்து தலையணை ஆறு வரையிலான சுமார் 1.5 கிலோ மீட்டர் தூர சாலை போடப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், தற்போது சாலை மிகவும் பழுதடைந்து உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சாலையில் ஆங்காங்கே குண்டும், குழிகளும் ஏற்பட்டுள்ளதுடன், கற்கள் சிதறிக் கிடக்கின்றன. மேலும் மண் திட்டுகளும் உருவாகியுள்ளன. இந்த பழுதடைந்த சாலை வழியாகவே சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். உருக்குலைந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது சாலையில் கிடக்கும் கற்கள் வாகனங்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி வாகனங்கள் பழுதடைவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், சாலையில் உள்ள பள்ளங்களில் இருசக்கர வாகனங்கள் சிக்கி தடுமாறுவதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தலையணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் நபர் ஒருவருக்கு ரூ.50 வீதம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வனத்துறைக்கு ஆண்டிற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. எனினும், சுற்றுலா பயணிகளின் முக்கிய தேவையான சாலையை சீரமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தலையணைக்கு செல்லும் உருக்குலைந்த சாலையை உடனடியாக சீரமைத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் களக்காடு தலையணை சாலை: சுற்றுலா பயணிகள் பாதிப்பு!
The News Outlook
🕒 10 ஆக., 2026, 08:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

