இலங்கையில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழகத்தின் பாரம்பரியச் சிறுதானியச் சாகுபடி மற்றும் தொழில்நுட்பங்களை அந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதர் டாக்டர் கணேசநாதன் கீதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியத் துறை சார்ந்த ஒத்துழைப்புகளை ஆராயும் நோக்கில், விருதுநகர் அருகே உள்ள சின்ன தாதம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தை இலங்கைத் துணைத் தூதர் பார்வையிட்டார். அப்போது, சிறுதானிய அடிப்படையிலான வணிக மதிப்புச் சங்கிலி (Value Chain) முறைகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
புத்தளத்தில் முதற்கட்டப் பயிற்சி வெற்றிகரம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கணேசநாதன் கீதிஸ்வரன் கூறியதாவது:
"இலங்கையில் சிறுதானியங்கள் குறித்த அனுபவமும் விழிப்புணர்வும் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. எனவே, முதற்கட்டமாகச் சிறுதானியச் சாகுபடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயிற்சிகள் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் தொடக்கமாக, இலங்கையின் புத்தளம் பகுதியில் மாதிரியாகக் கொண்டு செல்லப்பட்ட விதைகள் பயிரிடப்பட்டுத் தற்போது வெற்றிகரமாக முளைத்துள்ளன."
"புத்தளத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் வட பகுதி கிராமங்கள் உட்பட இலங்கை முழுவதும் இத்தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யவுள்ளோம். குறிப்பாக, அங்குள்ள பெண்களுக்குச் சிறுதானியம் சார்ந்த நுண், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (MSME) தொடங்குவதற்கான பயிற்சிகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதே எங்களின் முதன்மை நோக்கமாகும்" என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரப் பலன்களும் ஊட்டச்சத்தும்
இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் சிறுதானியங்களின் பங்கு குறித்துப் பேசிய அவர், "தற்போது இலங்கையின் பொருளாதார நிலைமை சீரடைந்து வருகிறது; எங்களிடம் 6 பில்லியன் டாலர் அன்னியச் செலவாணி கையிருப்பு உள்ளது. இருப்பினும், சிறுதானியச் சாகுபடி உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்கப் பெரிதும் உதவும். மேலும், குறைந்த நீராதாரத்தில், செயற்கை உரங்களின்றிப் பயிரிடக்கூடிய சிறுதானியங்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த ஊட்டச்சத்து உணவாகும்" என்றார்.
மேலும், இந்திய ஆராய்ச்சி வல்லுநர்கள் தயாரித்துள்ள 'உண்ணத் தயாராக உள்ள' (Ready-to-eat) சிறுதானியப் பொருட்களை இலங்கையில் அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மீனவர் பிரச்சினை குறித்து விளக்கம்
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், எல்லை தாண்டி வரும்போது இரு நாட்டு எல்லைப் படைகளாலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். "இப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அரசுகளும் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. நல்ல முடிவுகள் எட்டப்பட்டு வருகின்றன. மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாகவும் அரசு அளவில் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன" என்று அவர் கூறினார்.
தமிழக அரசுடன் முறையான தூதரகச் சந்திப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், வரும் காலத்தில் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

