இந்திய ஜவுளித்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில், நொய்டாவில் டிசம்பர் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்திய ITME சொசைட்டி சார்பில் நடைபெறும் 12-வது இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சியில், உலகம் முழுவதும் உள்ள 95 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், 1,800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்த உள்ளன.
சுமார் 2.40 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் 18 அரங்குகளில் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த சர்வதேச கண்காட்சியை 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியில் நவீன ஜவுளி இயந்திரங்கள், உற்பத்தி தொழில்நுட்பங்கள், ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இடம்பெற உள்ளன. இதன் மூலம் ஜவுளித்துறையில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மாற்றங்களை தொழில்துறையினர் நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’, ‘தற்சார்பு இந்தியா’, ‘PM MITRA Parks’ மற்றும் ‘தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டம்’ போன்ற முக்கிய முயற்சிகளுடன் இணைந்து இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
கோவை ஜவுளித்துறையின் முக்கிய மையமாக விளங்கும் நிலையில், கோவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்துறையினர் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் புதிய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதுடன், புதிய சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் சர்வதேச தொழில் தொடர்புகளை உருவாக்கவும் இந்தக் கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

