தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கான தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான சுமார் ரூ.755 கோடி மதிப்பிலான டெண்டரில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் குறைந்த விலைப்புள்ளி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ பணி ஆணை விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையுள்ள 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) சார்பில் டெண்டர் கோரப்பட்டது.
வெறும் 1 பைசா மட்டுமே செய்கூலி?
டெண்டரில் தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், பேக்கிங், காப்பீடு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்காக வெறும் 1 பைசா மட்டுமே கோரி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் L1 எனத் தேர்வாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இது L1 தேர்வு தொடர்பான தகவல் என்பதால், இறுதி பணி ஆணை வழங்கப்பட்ட பின்னரே ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதாகக் கருத முடியும்.
செப்டம்பர் 15 முதல் திட்டம்
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. மேலும், 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட டெண்டர் பதிவிலும், 22 காரட் தங்கத்தில் ஒரு கிராம் மோதிரங்களை மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது.

