தமிழகத்தில் குடும்பங்களின் சமையல் எரிவாயு செலவைக் குறைக்கும் வகையில், அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர், 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்குள் வருமானம் பெறும் குடும்பங்கள் முதற்கட்டமாக இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இலவச சிலிண்டருக்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும், இதன் மூலம் 1.30 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுவார்கள் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடியான சூழலிலும் பொதுமக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.4,000 கோடி செலவாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

