செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருக்கரணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள மரகத பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்த மரகத சிலை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருக்கரணை கிராமத்தில் உள்ள மலைக்கோவிலில் மரகத பாலதண்டாயுதபாணி முருகன் சிலை இருந்துள்ளது. இந்நிலையில், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மரகத முருகன் சிலையை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
கோவிலில் சிலை காணாமல் போனதை அறிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருடப்பட்ட சிலை பல கோடி ரூபாய் மதிப்புடையதாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து சித்தாமூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், கோவில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும், சிலை எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கோவில் சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

