விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குண்டலகுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி, வால குருநாதர் மற்றும் கருப்பசாமி திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குண்டலகுத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சாத்தூர், குண்டலகுத்தூர், சிறுக்குளம், சொக்கலிங்கபுரம், அப்பாயநாயக்கன்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை மகா யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கும்பங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்க, அங்காள பரமேஸ்வரி, வால குருநாதர், விநாயகர், கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை காண அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் குவிந்திருந்தனர். புனித நீர் கோவில் விமானங்கள் மீது தெளிக்கப்பட்டபோது, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "ஓம் சக்தி" என முழக்கமிட்டனர். கும்பாபிஷேக தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் புனித தீர்த்தத்தில் நனைந்து சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம் நடைபெற்ற நேரத்தில் கருடன் வானில் பறந்ததை பக்தர்கள் பக்தியுடன் கண்டு, இதனை இறைவனின் அருளாக கருதி "ஓம் சக்தி" என கோஷமிட்டனர்.
தொடர்ந்து கோவிலில் அருள்பாலிக்கும் வால குருநாதர், அங்காள பரமேஸ்வரி, விநாயகர், கருப்பசாமி, கால பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைத்து சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், கோவில் வளாகம் அருகே நாள் முழுவதும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார்கள், மருளாடிகள், பரம்பரை பூசாரிகள், பாதகுருடு மணியாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து செய்திருந்தனர்.

