விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்று வரும் ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் திருநாளையொட்டி, ஸ்ரீ ஆண்டாள் தங்க சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கண்ணன் திருக்கோலத்தில் கோவர்த்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையொட்டி நடைபெற்ற திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான தலமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், ஆண்டாள் அவதரித்த புனித தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. ஆண்டாளின் திருநட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இங்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருஆடிப்பூர உற்சவம் கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 14-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும் இந்த உற்சவத்தில், தினமும் காலையில் ஆண்டாள் மற்றும் ரங்கமன்னார் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
உற்சவத்தின் 4-ம் திருநாளான நேற்று, ஸ்ரீ ஆண்டாள் தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அதே நேரத்தில் ஸ்ரீ ரங்கமன்னார் கண்ணன் திருக்கோலத்தில் கோவர்த்தனகிரி வாகனத்தில் எழுந்தருளினார். சிங்கமாள்புரம் மண்டபத்தில் இருந்து தொடங்கிய இந்த திருவீதி உலா, கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
வாகனங்களில் எழுந்தருளிய ஆண்டாள் மற்றும் ரங்கமன்னாரை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர். விழா நடைபெற்ற பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 5-ம் திருநாள் ஐந்து கருட சேவை நாளை நள்ளிரவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 7-ம் திருநாள் இரவு சயன சேவையும் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், ஆடிப்பூர தினமான வருகிற 14-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 8.35 மணியளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

