விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூரத் திருவிழாவின் மூன்றாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பரங்கி நாற்காலி வாகனத்திலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்திருக்கோவிலில், திருவாடிப்பூர உற்சவம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று நள்ளிரவு, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பரங்கி நாற்காலி வாகனத்திலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் எழுந்தருளினர்.
மேல ரதவீதியில் தொடங்கிய இத்திருவீதி உலா, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி மற்றும் கீழ ரதவீதி ஆகிய நான்கு ரதவீதிகள் வழியாக பவனி வந்து, இறுதியாக இருப்பிடத்தை அடைந்தது.
திருவீதி உலாவின் போது, திரளான பக்தர்கள் "கோவிந்தா... கோபாலா..." என பக்தி கோஷங்களை முழங்கி, ஆடிப் பாடி சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

